அலகு 1 அ. அற்புதத்திருவந்தாதி- காரைக்கால் அம்மையார்

 



அ. அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்

அற்புதத் திருவந்தாதி நூல் குறிப்பு

  •  அற்புதத் திருவந்தாதி  என்னும் நூல் சைவத்திருமுறைகளில்  பதினோராம் திருமுறைத் தொகுதியில் அமைந்துள்ளது.
  • இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் மூத்தவரும் பெண் நாயன்மார்கள் மூவருள் ஒருவரான  காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார்.
  • இந்நூல் அந்தாதி யாப்பைப் பயன்படுத்திப் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும் அழைக்கப்படும்.
  • இறைவனின் மீது பாடப்பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. 
  •  இதன் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு.
  • இந்நூல் 101 வெண்பாப் பாடல்களைக் கொண்டது.
  • இவ் அந்தாதி சைவ நெறி குறித்தும், சிவபெருமானை முழுமையாகச் சரணடைவதைக் குறித்தும் கூறுகின்றது.
  • சிவபெருமானின் திருஉருவச் சிறப்பினையும், திருவருட் சிறப்பினையும், இறைவனின் குணத்தையும் விரிவாக இந்நூல் பாடுகிறது.

காரைக்காலம்மையார் குறிப்பு எழுதுக.

  • காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர்.
  • பெண் நாயன்மார்கள் மூவரில் ஒருவர்.
  • சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்.
  • காரைக்கால் மாநகரில் பிறந்தவர்.
  •  காரைக்கால் நகரில் பிறந்தவர் என்பதாலும் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப் பெற்றமையாலும் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப் பெற்றார்.
  • இயற்பெயர் புனிதவதி.
  • தந்தை பெயர் தனதத்தன்
  • கணவன் பெயர் பரமதத்தன்
  • பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த இவரில் இல்லற வாழ்வு இறைவன் நடத்திய மாம்பழ திருவிளையாடலால் முற்று பெற்றது.
  • இல்லறவாழ்விலிருந்து நீங்கிய அம்மையார் கணவனுக்காகத் தாங்கிய அழகு உருவம் நீங்கிப் பேய் வடிவத்தைத் தர வேண்டும் என்று இறைவனை வேண்டினார். 
  • பேய் வடிவம் பெற்ற அவர் இறைவனைப் பாடுதல் ஒன்றேயே தன் தொழிலாகக் கொண்டார்.
  • முதன்முதலாக இசைத்தமிழால் இறைவனைப் பாடிய பெருமை இவருக்கு உண்டு.
  • அந்தாதி எனும் இலக்கண முறையை தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
  • அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருஇரட்டை மணிமாலை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
  • காரைக்கால் சிவன் கோயிலில் இவருக்கெனத் தனி சந்நிதி காணப்படுகிறது.

பாடல் – 1

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப திடர் 

பாடல் – 2

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்

படரும் நெறி பணியாரேனும் - சுடர் உருவில்

என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)

அன்பறா தென்நெஞ் சவர்க்கு              

பாடல் – 3

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கே நாம் அன்பாவதல்லால் - பவர்ச்சடைமேல்

பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்

காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்

பாடல் – 4

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்

கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்

செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்

எம்மைஆட் கொண்ட இறை

பாடல் – 5

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே

எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்

வந்தால் அது மாற்றுவான்.

 

அற்புதத் திருவந்தாதியின் சிறப்புகளை நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக.

(அல்லது)

காரைக்கால் அம்மையாரின் பக்தித்திறத்தைக் குறிப்பிடுக.

 

காரைக்கால் அம்மையார் தான் இறைவனிடம் கொண்ட ஈடுபாட்டை அற்புதத் திருவந்தாதியில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பாடியுள்ள பாடல்கள் மூலம் அவர் இறைவன்மீது கொண்டுள்ள அன்பின் ஆழம், அவரின் மன உறுதி, இறைவனின் பண்பு நலன்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

இறைவன் மீது கொண்ட அன்பு

நான் இவ்வுலகில் பிறந்து மொழியினைப் பயின்று பேசத் தொடங்கிய மழலைக்காலம் முதல் உன்மீது அன்பு கொண்டு உன் திருவடிகளையே சரணமடைந்து என் மனம், மொழி, மெய்களால் இடைவிடாது எண்ணிப் போற்றி வழிபடுகின்றேன்.

சிவபெருமானே! எனக்கு ஏற்படுகின்ற துன்பங்களை நீ போக்கவில்லை என்றாலும், என்மீது மனம் இரங்கி இரக்கம் காட்டாமல் இருந்தார் என்றாலும், நான் செல்ல வேண்டிய நல்வழிகளைக் காட்டவில்லை என்றாலும், நான் இறைவன்மீது கொண்டுள்ள அன்பானது எப்பொழுதும் என்றைக்கும் மாறாத் தன்மையை உடையது ஆகும்.

ஏழு பிறவியிலும் சிவபெருமான் ஒருவரையே வணங்குவோம். இன்பம் வந்தபோதிலும், துன்பம் வந்தபோதிலும் அவருக்கே அன்பு செய்வோம். சிவபெருமானைத் தவிர வேறொருவருக்கும் ஆட்பட மாட்டோம், அதாவது சிவநெறியைப் பின்பற்றி இறைவனுக்கே தொண்டு செய்து வாழ்வோம்.

துன்பம் தீர்க்க வேண்டுதல்

“எஞ்ஞான்று தீர்ப்ப திடர்” இறைவா! என்னுடைய பிறவித்துன்பத்தை எப்பொழுது தீர்ப்பாய். எங்களை ஆட்கொண்ட இறைவனே! உம் திருவடித் தொண்டு செய்யும் அடியவர்களாகிய நாங்கள் எங்கள் துன்பத்தை எடுத்துக் கூறி முறையிட்டால் அம்முறையீட்டை உம் திருச்செவியிற் கோளாமல் போனது ஏன்? எங்களை உன் உறவாக ஏற்றுக் கொள்ளாததும் ஏன்?

அன்பினால் வேண்டும் தன் அடியவர்களுக்குக் கொடிய துன்பங்கள் வந்து வருத்தும்போது, அவற்றை முற்றிலும் நீக்கி வாழ்விப்பவனும் இறைவனே ஆவான்.

இறைவனின் பண்புகள்

நஞ்சை உண்டதால் நீல நிறம் கொண்ட கழுத்தினை உடையவன் சிவபெருமான். அவன் வானவர்களுக்கு எல்லாம் தலைவன். ஒளி வடிவமானவர். தன் திருமேனியில் எப்பொழுதும் எலும்பு மாலையை அணிந்தவர். தீயைக் கையிலேந்தி ஆடும் தன்மையுடையவர். கொடிபோல் விரிந்து படர்ந்த சடையின்மேல் இளம்பிறையைச் (நிலவு) சூடியவர்.  நீண்டு உயர்ந்த திருமேனி முழுவதும் செந்நிறமும், திருமிடறு மட்டும் கருமை நிறமும் கொண்டவர்.

இவ்வுலகில் இருக்கும் எல்லா உயிர்களிலும் எப்பொருளிலும் நீக்கமற நிறைந்திருப்பவன். எல்லா உயிர்களையும் படைத்து அவ்வுயிர்கள் வாழ்வதற்கான அனைத்துப் பொருட்களையும் படைத்தளித்துக் காக்கும் வல்லமை பெற்றவன் இறைவனே!  தன்னால் தோற்றம் பெற்ற யாவற்றையும் மீண்டும் தன்னுள் ஒடுக்கி ஆட்சி செய்பவனும் அவ்விறைவனே ஆவான்.

இவ்வுலக உயிர்களின் தந்தையாக இருப்பவன், முழு முதல்வனாகிய சிவபெருமானே ஆவார் என அற்புதத் திருவந்தாதி இறைவனின் பண்புகளைக் குறிப்பிடுகிறது. 

 ......................................................................................................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி