சிறுகதையின் தோற்றம் வளர்ச்சி

 

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை : காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்த போது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர். கதை கூறுபவர் தன்னுடைய கற்பனை வளத்தாலும், அனுபவத்தின் பயனாலும், தான் கண்டதையும் கேட்டதையும் விரித்துச் சொல்லி, கேட்போரின் மன மகிழ்விற்கும் பொழுது போக்கிற்கும் காரணமாக இருந்தனர். பொய்ம்மொழி, பொய்க்கதை, புனைகதை, கட்டுக்கதை, பழங்கதை என்றெல்லாம் கதைகள் அக்காலத்தில் சுட்டப்பட்டுள்ளன. குடும்பங்களில் சிறு குழந்தைகளுக்குப் ‘பாட்டி கதைசொல்லும் மரபு உண்டு. அம்மரபு போன தலைமுறை வரை தமிழ் மண்ணில் இருந்து வந்துள்ளது.

சிறுகதை இலக்கணம்

1) சிறுகதை என்றால் அளவில் சிறியதாய் இருக்க வேண்டும்.

 2) தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.

 3) சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.

 4) அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.

 5) விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.

 6) குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

 7) பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.

 8) சிறுகதை அளவிற் சிறியதாய், முழுமை பெற்று இருக்க வேண்டும்.

 9) சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.

 10) நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

 ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது.

 ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி - இவையனைத்தும் முக்கியமானவையாக இருக்க வேண்டும்.

தமிழில் சிறுகதையின் தோற்றம்

வாய்மொழி மரபாக இருந்த கதைகள் அச்சு இயந்திர வருகைக்குப் பின்னர், எழுத்து மரபிற்கு மாற்றம் பெற்றனர். அக்கதைகள் நூல்களாகவும் வெளிவந்தன. அல்லி அரசாணி மாலை, புலந்திரன் கதை, வீர அபிமன்யு, மயில் இராவணன் கதை, சதகண்ட இராவணன் கதை, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை என்று இக்கதைகள் பலவாகக் காணப்படுகின்றன.

மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும், கீழை நாடான ரஷ்யாவிலும் சிறுகதை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி, ஓர் உணர்ச்சி, ஓரிரு பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, அரைமணி நேரத்தில், ஒரே அமர்வில் படித்து முடித்துவிடக் கூடிய கதைகள் தோற்றம் பெற்று அச்சேறின. ஆங்கிலக் கல்வியின் காரணமாக, தமிழ்மொழியிலும் அதே போன்ற கதை மரபை நம்மிடையே உருவாக்கத் தொடங்கினர்.

தமிழ் மொழியில் அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு வீரமாமுனிவர் (1680-1749) எழுதிய பரமார்த்த குரு கதை என்ற கதை நூல், அவர் காலத்திற்குப் பிறகு, 1822இல் சென்னை கல்விச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. கதாமஞ்சரி (1826), ஈசாப்பின் நீதிக்கதைகள் (1853), மதனகாமராஜன் கதை (1885), மயில் இராவணன் கதை (1868), முப்பத்திரண்டு பதுமை கதை (1869), தமிழறியும் பெருமாள் கதை (1869), விவேக சாகரம் (1875), கதா சிந்தாமணி (1876) என்ற கதை நூல்கள் வெளியாயின.

பண்டிதர் ச.ம.நடேச சாஸ்திரி, தமிழ் நாட்டில் வழங்கி வந்த செவிவழிக் கதைகளைத் தொகுத்து, தக்காணத்துப் பூர்வ கதைகள் (1880), திராவிடப் பூர்வ காலக் கதைகள் (1886), திராவிட மத்திய காலக் கதைகள் (1886) என்ற தலைப்புகளில் வெளியிட்டார்.

தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கி வந்த தெனாலிராமன் கதை, மரியாதை ராமன் கதை போன்ற கதைகளும் தமிழில் அச்சாயின. அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் தொகுத்த விநோத ரச மஞ்சரி என்ற கதை நூல் 1876இல் வெளிவந்தது. இதில் கம்பர், ஒட்டக்கூத்தர், காளமேகம், ஏகம்பவாணன், ஒளவையார் போன்றோர் வரலாறு கதையாகச் சொல்லப்பட்டுள்ளது.

செல்வக்கேசவராய முதலியார் அபிநவக் கதைகள் என்ற கதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார். இவ்வாறு, தமிழில் சிறுகதை முயற்சிகள் அச்சு வடிவில் சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிய முடிகின்றது.

சிறுகதை வளர்ச்சி

தமிழ் அச்சு எழுத்துகள் தயாரிக்கப்பட்ட பின்னர், அச்சடித்த நூல்கள் பல தமிழில் வெளிவந்தன. மேலும் ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றின் விளைவாகப் புதிய இலக்கிய வகைகள் மலர்ந்தன. அவற்றுள் ஒன்று சிறுகதை. சிறுகதையின் வளர்ச்சி பெருகியது.

சிறுகதை முன்னோடிகள்

மாதவையா, பாரதியார், வ.வே.சு. அய்யர் போன்றோர் தமிழில் சிறுகதை முன்னோடிகளாகப் போற்றப்படுகிறார்கள்.

அ.மாதவையா

ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவல் படைத்து வந்த அ.மாதவையா 1910ஆம் ஆண்டில் இந்து ஆங்கில நாளிதழில் வாரம் ஒரு கதையாக 27 சிறுகதைகளை எழுதினார். பின்பு இக்கதைகள் 1912இல் Kusika’s Short Stories என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1924இல், இக்கதைகளில் பதினாறை, மாதவையாவே தமிழில் மொழிபெயர்த்து, குசிகர் குட்டிக் கதைகள் என்ற பெயரில் இரு தொகுதிகளாக வெளியிட்டார். குழந்தை மணத்தையும், கைம்பெண் கொடுமையையும், வரதட்சணைக் கொடுமையையும் பேசின. மாதவையா, தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட பஞ்சாமிர்தம் இதழிலும் தமிழில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். நவதந்திரக் கதைகள், வேணுமுதலி சரித்திரம், மன்மத ராணி, பூலோக ரம்பை, ஆவணி அவிட்டம், ஸ்வர்ண குமாரி, ஆறில் ஒரு பங்கு, காந்தாமணி, ரயில்வே ஸ்தானம் என்று பல கதைகளை எழுதியுள்ளார். பாரதியார் கதைகள் சம்பவங்களைப் பேசுகின்றனவே தவிர, இவற்றில் சிறுகதைகளுக்குரிய உணர்ச்சி இல்லை என்று பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.

வ.வே.சு. ஐயர்

வ.வே.சு. ஐயர் 1912ஆம் ஆண்டு, குளத்தங்கரை அரசமரம்  சொன்ன கதை என்ற தொகுதியை வெளியிட்டார். இதுவே தமிழின் முதல் சிறுகதையாகக் குறிப்பிடப்படுகிறது. வரதட்சணைக் கொடுமை இக்கதையின் கருப்பொருளாகும். ஒரு மரம் இக்கதையைச் சொன்னதாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இக்கதை, 1913ஆம் ஆண்டு விவேக போதினி இதழில் வெளிவந்தது. இவர் சிறுகதையின் தந்தை என்றழைக்கப்பட்டார்.

நாரண துரைக்கண்ணன்

நாரண துரைக்கண்ணன் சமுதாயப் பிரச்சினைகளைப் பேசும் கதைகள் பல எழுதியுள்ளார். 1915இல் தொடங்கி, சுமார் 60 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியில் இருந்தார் அவர்.

தி.ஜ.ரங்கநாதன்

தி.ஜ.ர.வின் முதல் சிறுகதை சந்தனக் காவடி ஆகும். இவருடைய புகழ் பெற்ற சிறுகதை நொண்டிக்கிளி ஆகும். கால் ஊனமுற்ற ஒரு பெண், எவரும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று உணர்ந்த பின் எடுக்கும் புரட்சிகரமான முடிவே கதையாகும். கதையில், நொண்டிப் பெண்ணின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. காந்தியத்தைப் பேசும் பல சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

மௌனி

மௌனியின் சிறுகதை முயற்சி வித்தியாசமானது. குறியீடு என்னும் உத்தியை  மையமாகக் கொண்டு கதைகளை எழுதியுள்ளார். அதனால், மௌனியின் கதைகளைச் சாதாரண வாசகர்களால் அத்துணை எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. ஏன்? இவருடைய முதல் கதையாகும். இவருடைய சிறுகதைகள் அனைத்தும் அழியாச் சுடர், மௌனியின் கதைகள் என்ற பெயர்களில் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

லா.ச.ராமாமிர்தம்

லா.ச.ரா. என்றழைக்கப்படும் இவர் கதை சொல்லும் நடையும் வித்தியாசமானதாகும். மந்திர உச்சாடனம் போலச் சொற்களை ஒலிப்பாங்குடன் பயன்படுத்தும் விதத்தில் தமக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். தரங்கிணி, காயத்திரி, இதழ்கள், புலி ஆடு, ஜ்வாலை என்பன இவருடைய சிறுகதைகளில் சிலவாகும்.

கல்கி

கல்கி, நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும், பின்பு கல்கி இதழிலும் எழுதியுள்ளார். அவர், அதிர்ஷ்ட சக்கரம், கவர்னர் விஜயம், காங்கிரஸ் ஸ்பெஷல், கோர சம்பவம், சாரதையின் தந்திரம், டெலிவிஷன், திருவழுந்தூர் சிவக்கொழுந்து என்று பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.

கதர் இயக்கம், தீண்டாமை அகற்றுதல், உப்புச் சத்தியாகிரகம், புலால் உணவு தவிர்த்தல், விதவா விவாகம், பாலிய விவாகக் கொடுமை என்று விடுதலை உணர்வுடைய கதைகளையும், சமூக உணர்வுடைய கதைகளையும் எழுதியுள்ளார். இவருடைய எழுத்தில் நகைச்சுவை முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர் எழுதிய வரலாற்று நாவல்களைப் போல இச்சிறுகதைகள் இலக்கியத் தகுதியைப் பெறவில்லை என்றாலும் சிறுகதை வளர்ச்சியில் கல்கியின் பங்கு முக்கியமான ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதை மறுக்க இயலாது.

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் கதைகள் வடிவம், உத்தி, உள்ளடக்க முறைகளில் பரிசோதனை முயற்சிகளாக அமைந்து இலக்கிய அந்தஸ்து பெற்ற சிறுகதைகளாகச் சிறந்தன. தமிழ்ச் சிறுகதை முயற்சியை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றவர்களுள் புதுமைப்பித்தன் முதன்மையானவர் ஆவார். மணிக்கொடி என்ற இலக்கியப் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு மிகச்சிறந்த படைப்பு முயற்சியில் ஈடுபட்டார். மேல்நாட்டுச் சிறுகதை ஆசிரியர்களின் படைப்பாக்கத்தை நன்கு அறிந்த அவர், அவற்றை உள்வாங்கிக் கொண்டு, தமது சொந்தப் படைப்பாளுமையைக் கொண்டு அற்புதமான சிறுகதைகளைப் படைத்துள்ளார்.

புதுமைப்பித்தன் கேலிக்கதைகள், புராணக் கதைகள், தத்துவக் கதைகள், நடப்பியல் கதைகள் என்று பலவகையான கதைகளைப் படைத்துள்ளார்.

பொய்க் குதிரை, ஒருநாள் கழிந்தது, பொன்னகரம், துன்பக்கேணி, சாபவிமோசனம், அகல்யை, அன்றிரவு, கயிற்றரவு, மகாமசானம், ஞானக் குகை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சங்குத்தேவனின் தர்மம், வேதாளம் சொன்ன கதை போன்ற கதைகளையும் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் புதுமைப்பித்தனின் ஆளுமையும் மேதைமையும் பின் வந்த படைப்பாளிகளுக்கு முன் மாதிரியாக அமைந்தன எனலாம். புதுமைப்பித்தன் சாகாவரம் பெற்ற சிறுகதைகளைப் படைத்து, தமிழ் இலக்கியக் கருவூலத்திற்கு வளம் சேர்த்துள்ளார்.

ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தியின் கதைகளிலும் சிறுகதையின் வடிவமும் உத்தியும் சிறப்பாக அமைந்துள்ளன. மனித மன ஆழத்தை அவர் தம் கதைகளில் சிறப்பாக வடித்துள்ளார். பதினெட்டாம் பெருக்கு, தாய், வானம்பாடி, மண்ணாசை, விழிப்பு, பஞ்சகல்யாணி போன்ற பல இலக்கியத் தரமான கதைகளைப் படைத்துள்ளார்.

கு.ப.ராஜகோபாலன்

இவர் ஆண் பெண் உறவை மையமாகக் கொண்டு பல கதைகளை எழுதியுள்ளார். அக்காலத்தில் பிறர் தொடத் தயங்கிய பிரச்சினைகளை உணர்ச்சியைத் தூண்டிவிடும் வகையில் இல்லாமல், ஆக்கப் பூர்வமாக அணுகிப் பார்த்துள்ளார். திரை, சிறிது வெளிச்சம், மூன்று உள்ளங்கள், ஆற்றாமை, விடியுமா, நூருன்னிசா, தாயாரின் திருப்தி போன்ற இவருடைய கதைகள் ஆகும்.

அகிலன்

அகிலன் பதினேழு சிறுகதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் முதல் சிறுகதை காசு மரம் என்பதாகும். வறுமை, ஆண் பெண் உறவுகள், விதவை நிலை, வரதட்சணைக் கொடுமை, நட்பு, வீரம், காதல் போன்ற பொருண்மைகளில் இவருடைய கதைகளில் காணக்கிடைக்கின்றன.

இவருடைய எரிமலை என்ற இக்கதை சிறுகதைத் தொகுதி தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது. பின்பு அக்கதை, எங்கே போகிறோம் என்ற நாவலாக அவரால் விரித்து எழுதப்பட்டது. சகோதரர் அன்றோ, கங்காஸ்நானம், சிசுவின் குரல், ஏழைப் பிள்ளையார், பெரிய மீன், ஆண்-பெண், குழந்தை சிரித்தது, சத்திய ஆவேசம், நெல்லூர் அரிசி, பசியும் ருசியும், விடுதலை என்பன இவர் எழுதிய சிறுகதைகளுள் சிலவாகும்.

தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமன், தமிழ் எழுத்துலகில் நாவல், சிறுகதை என்ற இரண்டு இலக்கிய வகைகளிலும் முன்வரிசையில் நிற்பவர். கு.ப.ரா. வைப் போன்று ஆண், பெண் உறவைக் கதைப் பொருளாக்கிக் கொண்டவர் ஆவார். கதைமாந்தர் படைப்பிலும், மொழி ஆளுகையிலும் வெற்றி பெற்றவர். இவர் மறதிக்கு, செய்தி, முள்முடி, சிலிர்ப்பு போன்ற பல கதைகளை எழுதியுள்ளார்.

நா.பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி தெய்வத்தாலாகாதெனினும், ஆயுதம், தகுதியும் தனிமனிதனும், பிரதி பிம்பம், ஒரு கவியின் உள்உலகங்கள், மறுபடியும் ஒரு மஹிஷாசுர வதம், அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான், களவும் கற்று, ஒரு சர்வதேசக் கருத்தரங்கு போன்ற பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.

மு.வரதராசனார்

            இவர் சிறுகதை, நாவல், ஆய்வுநூல், கட்டுரை எனப் பன்முகத்தில் தடம் பதித்த தமிழ்ச்சான்றோர். இவர் விடுதலையா?, குறட்டை ஒலி, பழியும் பாவமும் போன்ற சிறுகதைகளை எழுதியுள்ளார்.

அறிஞர் அண்ணா

உள்ளடக்கம், உத்தி, நடை ஆகியவற்றை முழுமையாகக் கையாண்டு கதை படைத்தவர்களுள் அண்ணா முதன்மையானவர். சாதி சமய மறுப்பு, வறுமை, கலப்பு மணம், பலதார மணம், விதவை மணம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதியவர்.

தஞ்சை வீழ்ச்சி, சொர்க்கத்தில் நரகம், திருமலை கண்ட திவ்விய ஜோதி, புலி நகம், பிடி சாம்பல் போன்ற பல கதைகளில் மத நம்பிக்கையைக் கண்டித்துள்ளார். செவ்வாழை இவருடைய மிகச் சிறந்த கதையாகும். ஏழ்மையின் கொடுமையை இக்கதையில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்.

மு.கருணாநிதி

வடிவ உத்தியுடன் பகுத்தறிவுப் பாதையில் கதை எழுதியவர் மு.கருணாநிதி. குப்பைத்தொட்டி, கண்டதும் காதல் ஒழிக, நளாயினி, பிரேத விசாரணை, தொத்துக் கிளி, வாழ முடியாதவர்கள் போன்ற இவருடைய சிறுதைகள் குறிப்பிடத்தக்கன.

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்ட அவர் தொடக்கத்தில் சோதனை ரீதியாகவும் பின்னர் ஜனரஞ்சகமாகவும் கதைகளைப் படைத்துள்ளார். இவருடைய பல சிறுகதைகள் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாயின. சிறுகதையின் உள்ளடக்கத்திற்கு மட்டுமல்ல, வடிவத்திற்கு உரமளித்தவர் இவர். இவருடைய எழுத்துகள் பலரை எழுதத் தூண்டின. இவருடைய பாணியில் இன்று பலர் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு பிடி சோறு, இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, மாலை மயக்கம் உண்மை போன்ற 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், நீல பத்மநாபன், வண்ணநிலவன், வண்ணதாசன், சுஜாதா, நவபாரதி, சுப்பிரமணிய ராஜு, பாலகுமாரன் போன்றவர்களும் பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், கிருஷ்ணன் நம்பி, ஜெயமோகன், ஜி.நாகராஜன் போன்றவர்களும் சிறுகதைப் படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகத் தடம் பதித்துள்ளனர்.

சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களின் பங்கு

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களின் பங்கு தொடக்கம் முதல் இருந்து வந்துள்ளது. 1975 களில் கு.ப.சேது அம்மாள் (கு.ப.ரா.வின் சகோதரி), கமலா விருத்தாசலம் (புதுமைப்பித்தனின் மனைவி), விசாலாட்சி அம்மாள், வை.மு.கோதை நாயகி அம்மாள், சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள் போன்றவர்கள் பரவலாக இதழ்களில் எழுதி வந்துள்ளனர். இவர்களில் சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள் போன்றவர்கள் பிற இந்தி மொழிச் சிறுகதைகளையும், ஆங்கிலச் சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.

குமுதினி, குகப்பிரியை, வசுமதி ராமசாமி, எம்.எஸ்.கமலா போன்ற எழுத்தாளர்கள் இக்காலக் கட்டத்தில் காந்தியம், தேசியம், விதவை மறுமணம், பாலிய மணக் கொடுமைகள், தேவதாசிக் கொடுமைகள் இவற்றைக் கருப் பொருளாகக் கொண்டு சிறுகதைகள் படைத்துள்ளனர்.

இதற்கு அடுத்த காலக் கட்டத்தின் தொடக்கத்தில் அநுத்தமா, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், கே.ஜெயலெட்சுமி, வேங்கடரமணி, இந்திரா தேவி, சரோஜா ராமமூர்த்தி போன்றோர் கதை எழுதியுள்ளனர். கலைமகள் இதழில் பரிசுக்குரிய சிறுகதைகளைப் பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களே படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ராஜம் கிருஷ்ணனின் ஊசியும் உணர்வும், நூறு ரூபாய் நோட்டு, ஸ்ரீமதி விந்தியா எழுதிய அன்பு மனம், குழந்தை உள்ளம், சூடாமணி எழுதிய காவேரி போன்ற கதைகள் பரிசு பெற்ற சிறுகதைகளாகும்.

1947இல், கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் அநுத்தமாவின் முதல் கதையான அங்கயற்கண்ணி இரண்டாம் பரிசினைப் பெற்றது. இக்காலக் கட்டப் பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகள் மற்றும் குடும்பச் சிக்கல்களை வைத்துக் கதைகள் எழுதினர், ராஜம் கிருஷ்ணன், சூடாமணி இருவர் மட்டும் சமூக நோக்குடைய கதைகளை எழுதி வந்துள்ளனர்.

1960களில் தொடங்கிச் சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றவர்கள் சிறுகதைகள் அதிகம் எழுதியுள்ளனர். இவர்களது சிறுகதைகளில் பெரும்பாலும் காதல், காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தையின்மை போன்றவை கருக்களாக அமைந்திருந்தன. எழுபத்தைந்துக்குப் பின் சிவசங்கரி, வாஸந்தி எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகப் பிரச்சினைகள், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றைக் கருவாகக் கொண்ட கதைகளை இவர்கள் எழுதத் தொடங்கினர்.

இதே காலக் கட்டத்தில் தோற்றம் பெற்ற ஜோதிர்லதா கிரிஜா தொடக்கத்திலிருந்தே சமூக உணர்வோடு சிறுகதைகள் படைத்து வருகிறார்.

இக்காலக் கட்டத்தில் பெண்களின் எழுத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பெண் கல்வி, பொருளாதாரச் சுயசார்பு, வேலைவாய்ப்பு, வெளி உலகத் தொடர்பு இவை காரணமாகப் பெண்களின் கதைக்களம் இல்லம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து விரிந்து பரந்ததாக அமைந்தது. கதை சொல்லும் உத்திமுறை, வடிவ நுணுக்கங்கள் என்ற நிலையிலும் பெண் எழுத்துகள் இக்காலக் கட்டத்தில் சிறப்புப் பெற்றன. இவர்கள், இன்றைய நடப்பியல் பிரச்சினைகளான பெண் கருவழிப்பு, பெண் சிசுக்கொலை, இரட்டைச் சுமை, பாலியல் பலாத்காரம், நவீனத் தொழில் நுட்பங்களால் ஏற்படும் பாதிப்பு, சுற்றுச் சூழலால் ஏற்படும் பாதிப்பு, பெண் உடல் அல்லது மனம் சார்ந்த பிரச்சினைகள் எனச் சிறுகதைப் பொருண்மைகள் விரிந்து பரந்துள்ளன.

இக்காலக் கட்டத்தில் அம்பை, காவேரி, திலகவதி, சிவகாமி, பாமா, அனுராதா, உஷா சுப்பிரமணியன், தமயந்தி, உமாமகேஸ்வரி, தமிழ்செல்வி போன்ற பெண் எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். இவர்களில், அம்பை மொழி நடையிலும், சிறுகதையின் உருவத்திலும், உள்ளடக்கத்திலும், பொருண்மையிலும் மாறுபட்டவற்றைக் கையாண்டு சிறந்த சிறுகதைகளைப் படைத்து வருகிறார். அம்மா ஒரு கொலை செய்கிறாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, வாமனன், கருப்புக் குதிரைச் சதுக்கம் போன்ற கதைகள் அம்பையின் மிகச்சிறந்த கதைகளாகும்.

காவேரி என்ற புனைபெயர் கொண்ட லட்சுமி கண்ணன் ஓசைகள், வெண்மை போர்த்தியது போன்ற தொகுதிகளில் நவீனப் பெண்களின் பிரச்சினைகளைக் கையாண்டுள்ளார். சிவகாமி, பாமா இருவரும் தலித் பெண்ணியக் கதைகளைப் படைத்துள்ளனர்.

சிறுகதை உருவாக்கத்திற்குத் துணைநின்ற இதழ்கள் மற்றும் அமைப்புகள்

தரமான எந்நாளும் போற்றக்கூடிய கதைகளை வெளியிட்டுச் ‘சிறுகதை இலக்கியத்திற்கு ஒரு சிவிகையாகமணிக்கொடி இதழ் சிறந்தது. இதனால் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் இக்காலக் கட்டத்தை மணிக்கொடிக் காலம் என்று போற்றுகின்றனர்.

ஆனந்த விகடன், கலைமகள், மணிக்கொடி இதழ்களுக்கு முன்னர் தொடக்கத்தில் விவேக சிந்தாமணி, விவேக போதினி போன்ற இதழ்கள் சிறுகதைகளை வெளியிட்டுச் சிறுகதை வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டன. அடுத்த நிலையில் மாதவையா ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ்நேசன், பஞ்சாமிர்தம் இதழ்கள் நல்ல சிறுகதைகளை வெளியிட்டு வந்துள்ளன. பாரதியார் காலத்தில் சக்கரவர்த்தினி இதழ் சிறுகதை ஆக்கத்திற்குத் துணை நின்றுள்ளது. சுதேசமித்திரன், நவசக்தி, விமோசனம் ஆகிய இதழ்கள் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டன. சுதேசமித்திரன் வாரப் பதிப்பு, தினமணி வார வெளியீடு, ஆனந்த போதினி, அமிர்தகுண போதினி, பிரசண்ட விகடன், ஊழியன், சுதந்திரச் சங்கு, காந்தி போன்ற இதழ்களில் சிறுகதைகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு வந்தது. சூறாவளி (1939), பாரத தேவி (1939), கலாமோகினி (1942), கிராம ஊழியன் (1943-1947), சந்திரோதயம் (1954-47), முல்லை (1946), தேனீ (1948) என்ற இதழ்கள் வெளிவந்தன. அவ்வப்போது தோன்றி மறைந்த இவ்விதழ்களும் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்துள்ளன. பின்பு சரஸ்வதி, ஹனுமான், சக்தி, எழுத்து போன்ற இதழ்கள் ஐம்பதுகளில் தோற்றம் பெற்றன. அறுபதுகளில் தீபம், இலக்கிய வட்டம், கணையாழி, நடை, கசடதபற, கொல்லிப்பாவை, யாத்ரா, பிரக்ஞை, சுவடு, அஃ, வாசகன், கண்ணதாசன் போன்ற இதழ்கள் அவ்வப்போது தோன்றின. அவற்றில் சில மறைந்தன. தீபம், கணையாழி, கண்ணதாசன் இதழ்கள் சிறுகதை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பின்னர் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் குங்குமம், குமுதம், கல்கி, தாய், சாவி, இதயம் பேசுகிறது போன்ற வார இதழ்களும் தினமலர், தினத்தந்தி போன்ற நாளிதழ்களின் வாரப் பதிப்புகளும் சிறுகதைகளை வெளியிட்டு வந்தன. சுபமங்களா, காலச்சுவடு, நிகழ், புதிய பார்வை, கவிதாசரண், புதுஎழுத்து, தாமரை, செம்மலர் போன்ற இதழ்களும் சிறுகதை வெளியீட்டில் அக்கறை காட்டி வருகின்றன. இவை தவிர மகளிர் இதழ்களான மங்கை, மங்கையர் மலர், அவள் விகடன், பெண்மணி, சிநேகிதி போன்ற இதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. மொத்தத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இதழ்கள் தலையாய இடத்தைப் பெற்றுள்ளன எனலாம்.

அரசு மற்றும் தனியார் அமைப்புகளும் சிறுகதைப் போட்டிகளை நடத்தி சிறுகதை வளர்ச்சிக்கு ஆக்கம் அளித்துஏஏனர்.  குறிப்பாக, ஆயுள் காப்பீட்டுக் கழகம், குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை போன்றவைகளும் தங்கள் கருத்துகளைப் பரப்பும் விதமாகச் சிறுகதைப் போட்டிகளை நடத்தியுள்ளன.

1970ஆம் ஆண்டு, இலக்கிய ஆர்வம் மிகுந்த இலட்சுமணன், சிதம்பரம் என்ற இரு சகோதரர்கள் இணைந்து இலக்கியச் சிந்தனை என்னும் அமைப்பினைத் தோற்றுவித்தனர். வண்ணதாசன், வண்ணநிலவன், ஐராவதம், ஆதவன், ராஜநாராயணன், பிரபஞ்சன், வீர வேலுச்சாமி, நாஞ்சில் நாடன், திலீப்குமார் ஆகியவர்கள் அனைவரும் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைப் படைப்பாளர்களின் வரிசையில் இடம்பெற்றவர்கள்.

1977 முதல் இலக்கிய வீதி என்ற அமைப்பு இனியவன் என்பவரால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவ்வமைப்பினர், மாதந்தோறும் பிரபல எழுத்தாளர்களை மதுராந்தகம், செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு அழைத்து இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அதோடு தில்லி போன்ற பெருநகரங்களுக்குச் சென்று, அங்குள்ள படைப்பாளிகளின் உதவியுடன் சிறுகதைப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இலக்கிய வீதியின் பணி குறிப்பிடத்தக்கதாகும்.

கோவையைச் சேர்ந்த லில்லி தேவசிகாமணி அமைப்பு, திருப்பூர்த் தமிழ்ச் சங்கம், பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய அமைப்பு என்று சில அமைப்புகள் சிறந்த சிறுகதைகளுக்கு ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி வருகின்றன.

தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் சிறந்த இலக்கிய நூல்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கும் போது, சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கும் பரிசு நல்கி வருகின்றது.

இத்தகைய அமைப்புகள் போட்டிகள் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு நல்ல சிறுகதைகளைத் தந்தன என்பதைவிடப் புதிய புதிய எழுத்தாளர்களை உருவாக்கித் தந்தன என்று கூறலாம்.

இருபத்தோராம் நூற்றாண்டு தொடர்பு யுகம், கணினி யுகம் என்றெல்லாம் சுட்டப்படுகிறது. இந்நூற்றாண்டில், இணைய இதழ்கள் என்ற புதுவகை இதழ்கள் தோற்றம் பெற்றன. அவற்றில் உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஒருங்கே இடம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த காஞ்சனா தாமோதரன், கீதா பென்னட், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் தொடர்ந்து இவ்விதழ்களில் எழுதி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து உலகத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் சங்கமிக்க இணைய இதழ்கள் வழி அமைத்தால் அது தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியை மற்றோர் உயரத்திற்கு உறுதியாக இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

தொகுப்புரை

Ø  தமிழ்ச் சிறுகதைகளின் மூலவர்களாக மாதவையா, பாரதி, வ.வே.சு.ஐயர் இவர்களைக் குறிப்பிடலாம்.

Ø  சிறுகதை வரலாற்றில் மணிக்கொடி இதழ் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

Ø  புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் இருவரும் சிறுகதை மன்னர்கள் என்று சுட்டப்படும் அளவிற்குத் தரமான நல்ல கதைகள் படைத்துள்ளனர்.

Ø  சிறுகதை     வளர்ச்சியில்     இதழ்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

Ø  தமிழ்நாட்டிற்கு வெளியேயும் தமிழ்ச் சிறுகதை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

Ø  இணைய இதழ்கள் மூலம் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கமமாகும் சூழல் ஏற்பட்டு வருகின்றது.

                         வினாக்கள் சில

  1. சிறுகதை இலக்கியத்திற்குச் ‘சிவிகையாக விளங்கிய இதழ் எது?

விடை : மணிக்கொடி இதழ்

2.    சிறுகதைகளைப் படைத்து வரும் தலித் பெண் எழுத்தாளர்கள் இருவரைக் குறிப்பிடுக.

விடை : சிவகாமி, பாமா

3.    தமிழில் முதல் சிறுகதைப் போட்டியை எந்தப் பத்திரிகை எந்த ஆண்டு நடத்தியது?

விடை : ஆனந்த விகடன், 1933ஆம் ஆண்டு

4.    சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் அமைப்புகள் இரண்டின் பெயரினைக் கூறுக.

விடை : இலக்கியச் சிந்தனை, இலக்கிய வீதி

5.    இலங்கைச் சிறுகதை எழுத்தாளர்களில் முதன்மையானவர் யார்?

விடை : மு. தளைய சிங்கம்

6.    மலேசியாவில் சிறுகதை வளர்க்கும் இரு இதழ்களின் பெயரினைக் கூறுக.

விடை : பாரத மித்திரன், திராவிட கேசரி.

7.    ரஷ்யாவில் ‘சிறுகதையின் தந்தைஎன்று போற்றப்படுபவர் யார்?

விடை : கொகொல்

8.    விநோத ரச மஞ்சரியின் ஆசிரியர் யார்?

விடை : அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்.

9.    பாரதியார் எழுதிய சிறுகதைகள் இரண்டின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை : நவதந்திரக் கதைகள், ஆறில் ஒரு பங்கு,

10. குளத்தங்கரை அரசமரம் - இச்சிறுகதையை எழுதியவர் யார்?

விடை : வ.வே.சு. அய்யர்

11. தமிழில் சிறுகதை முன்னோடிகளாகக் குறிப்பிடப்படுபவர்கள் யாவர்?

விடை : மாதவையா, பாரதியார், வ.வே.சு. அய்யர்

12. திராவிட இயக்க எழுத்தாளர்கள் பெயர்களைச் சுட்டுக.

விடை : அண்ணா, மு.கருணாநிதி, ஆசைத்தம்பி, தென்னரசு, தில்லை வில்லாளன்.

13. நவீனச் சிறுகதை எழுத்தாளர்கள் இருவர் பெயரினைக் கூறுக.

விடை : ஜெயகாந்தன், சிவசங்கரி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி