கலித்தொகைப்பாடல் 51 பொருள் விளக்கம்

 

கலித்தொகை 51 ஆம் பாடல்

குறிஞ்சிக் கலி 15

 கூற்று : தலைவி கூற்று

பாடியவர்கபிலர்

திணை குறிஞ்சி

துறை : புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்தலைவி,

தோழிக்குக் கூறியது

துறை விளக்கம் :  தலைவன் தலைவியைக் காண வேண்டும் என்ற வேட்கையில் தான் செல்வதற்கு உரிமையில்லாத பகற்பொழுதில் தலைவன், தலைவியின் வீட்டுக்குள் புகுதல். அவ்வாறு புகுந்தவனைத் தலைவி காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளும் திறம் வியந்து பேசுவது இத்துறை ஆகும்.

     புகாஅக்காலை : உணவு உண்ணும் நேரம். பகல் சாப்பிடும் நேரம் பார்த்து ஒரு வீட்டிற்குள் புகுதல் என்றும் பொருள் கொள்ளலாம்

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்

மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,

நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே!           5

உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,

அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!

உண்ணு நீர் ஊட்டி வாஎன்றாள்: என, யானும்

தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை

வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,              10

அன்னாய்! இவனொருவன் செய்தது காண்என்றேனா,

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,

உண்ணு நீர் விக்கினான்என்றேனா, அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்

கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம்      15

செய்தான், அக் கள்வன் மகன்


தலைவியின் காதல் குறிப்பை விளக்கும் கலித்தொகைப் பாடல் கருத்தை விளக்குக

                                (அல்லது)

தலைவன் தலைவியின் காதல் குறிப்பைத் தெரிந்து கொள்ள செய்த செயலைக் கலித்தொகைவழி விளக்குக.

                                  (அல்லது)

தலைவி தோழியிடம் கூறுவதாக வரும் கலித்தொகைப் பாடலை விளக்குக.

                                      (அல்லது)

தலைவனின் செயலை தோழியிடம் புனைந்துரைக்கும் தலைவி கூற்றாக வரும் கலித்தொகைப் பாடலின் கவித்திறனை விளக்குக.

                                      (அல்லது)

கபிலர் பாடிய குறிஞ்சிக்கலிப் பாடலின் சிறப்பினை எழுதுக. 


Ø  ஒளி வீசும் வளையலை அணிந்த தோழியே நான் சொல்வதைக் கேட்பாயாக

Ø சிறு வயதில் நாம் தெருவில் மணல்வீடு கட்டி விளையாடுவோம் அல்லவா அப்பொழுது வந்து நம் மணல் வீட்டை காலால் உதைத்து இடித்தவன்

Øநாம் தலையில் சூடியிருக்கும் மலர் மாலைகளைப் அறுத்து எறிபவன் 

Øநாம் விளையாடும் பந்துகளையும் எடுத்துக்கொண்டு ஓடியபவன் 

Øஇப்படியெல்லாம் நமக்குச் சிறுவயதில் துன்பம் உண்டாக்கியவன் 

Øதன் விருப்பம் போல் சுற்றித் திரிந்து கட்டுபாடு இல்லாமல் குறும்புகளைச் செய்யும் இயல்பினைக் கொண்டவன் 

Øபின்னர் ஒருநாள் என் வீட்டிற்கு வந்தான்.

Øஅப்பொழுது நானும் என் அன்னையும் வீட்டில் இருந்தோம்.

Øவீட்டிற்கு வந்தவன் தண்ணீர் உண்ணும் வேட்கையில் வந்தேன் என்றான்

Øஎன் அன்னையும் அடர்ந்த பொன் கிண்ணத்தில் தண்ணீர் கொண்டு கொடுத்து வா என்றாள் 

Øஒளி வீசும் அணிகலன் அணிந்தவளே! அவன் நீர் உண்ணும்படிச் செய்துவிட்டு வா - என்றாள். 

Øநானும் வந்திருப்பவன் யாரென்று தெரியாமல் தண்ணீர் கொண்டு சென்றேiஃ

Øஅவன் வளையலணிந்த என் முன் கையைப் பற்றி இழுத்தான் 

Øநான் திகைப்புற்று அன்னையே இவன் ஒருவன் செய்வதைப் பார் என்று அலறினேன் 

Øஉடனே என் அன்னையும் உள்ளிருந்து அலறிக்கொண்டு ஓடிவந்தாள்

Øஉண்ணும் தண்ணீர் விக்கினான் என்று சொன்னேன் 

Øஅன்னையும் உடனே அவன் முதுகை நீவிக் கொடுத்தாள்

Øஅவனோ என்னைக் கடைக்கண்ணால்  கொல்பவன் போலப் பார்த்துச் சிரித்தான்

Øஎன் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் மகன் என்று தன் காதல் கொண்டதைத் தோழிக்கு எடுத்துரைக்கிறாள் தலைவி

Øஇப்பாடல் ஒரு சிறுகதை போன்றும் ஓரங்க நாடகம் போன்றும் நகைச்சுவையுடன் அமைந்துள்ளது

கபிலரின் கவித்திறனை வெளிபடுத்துகிறது இப்பாடல்

.............................................................................................




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி