சிறப்புத்தமிழ் - செந்தமிழ் நாடெனும் போழ்தினிலே - பாரதியார்

 

பாரதியார்

பிறந்த ஆண்டு : டிசம்பர் 11, 1882

இறந்த ஆண்டு : செப்டம்பர் 11, 1921

பெற்றோர் : சின்னசாமி ஐயர்  - இலக்குமி அம்மாள்

பிறந்த இடம் : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம்

இயற்பெயர் : சுப்பிரமணியன் (சுப்பையா)

நூல்கள் : பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.

பாடல்

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே        (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்

வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல

காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்

கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு      (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்

கண்டதோர் வையை பொருனைநதி-என

மேவி யாறு பலவோடத்-திரு

மேனி செழித்த தமிழ்நாடு.         (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று

மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்

எத்தனை யுண்டு புவிமீதே-அவை

யாவும் படைத்த தமிழ்நாடு.       (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட

மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.    (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.    (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி

யாரம் படைத்த தமிழ்நாடு.        (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக-மாதிய

தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு.  (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்

வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்

பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்

பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.     (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம்-இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை

ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு.   (செந்தமிழ்)

விளக்கம்

செந்தமிழ் என்று சொல்லும் போதே தமிழ்மொழியின் இனிமை வெளிப்படும். 

செந்தமிழ் நாடு என்று சொல்லும் போது தமிழ்நாடு அனைத்து வளங்களையும் கொண்ட சிறப்பான நாடு என்பது புலப்படும்

அச்சொற்களைக் கேட்டவுடனே வலிமை உண்டாகும்

மண், மலை, கடல், இயற்கை வளம் கொண்ட நம் நாடு

காவிரி, தென்பண்ணை, பாலாறு, வைகை போன்ற ஆறுகளும் ஓடி வளம் கொழிக்கும் நாடு  

கல்வியில் சிறந்த சான்றோர்களைக் கொண்ட நாடு

திருவள்ளுவர் முதல் கம்பன் வரை எண்ணற்ற புலவர்களைக் கொண்ட நாடு

உலக அளவில் தமிழின் பெருமையை வள்ளுவர் உணர்த்தியுள்ளார். 

உலகில் உள்ள நூல்கள், பாடல்கள் அனைத்துமே சமய சார்புடையது. 

ஆனால் நமது வள்ளுவன் இயற்றிய பாடல்கள் உலக புகழ் பெற்ற பொது மறை என்னும் சிறப்பினை உடையது. 

 வணிகத்தில் சிறந்த நாடு. 

தமிழர்கள் எகிப்து, சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் ஏலக்காய்(ஏலம்), கிராம்பு (இலவங்கம்) போன்றவை அதிக அளவில் வணிகம் செய்து புகழ் பெற்றனர்.  

இவை அனைத்தையும் பாரதியார் செந்தமிழ் நாடெனும் என்ற பாடல் மூலம் விளக்கித் தமிழின் சிறப்பை மேன்மையை விளக்கியுள்ளார். 
......................................................................................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி