கடுவெளிச் சித்தர் - ஆனந்தக்களிப்பு

     

கடுவெளிச்சித்தர் - ஆனந்தக் களிப்பு (பாபம் செய்யாதிரு மனமே)

(தன் செயலுக்கு காரணமான மனத்திடம் கூறுவதைப் போல நமக்கு உபதேசிக்கிறார். பாவம் செய்யாதிரு, செய்தால் யமன் உன்னை கொண்டாடி அழைத்து செல்வான் என்கிறார்)

பல்லவி

    பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்

    கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்

    பாபஞ்செய் யாதிரு மனமே.

 சரணங்கள்

    சாபம் கொடுத்திட லாமோ ? - விதி

    தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?

    கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை

    கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1

     சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்

    சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

    நல்லபத்த திவிசு வாசம் - எந்த

    நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2

     நீர்மேற் குமிழியிக் காயம் - இது

    நில்லாது போய்விடும் நீயறிமாயம்

    பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்

    பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

     நந்த வனத்திலோ ராண்டி - அவன்

    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்

    கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4

     தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்

    சொத்துகளிலொரு தூசும் நில்லாதே

    ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்

    திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5

     நல்ல வழிதனை நாடு- எந்த

    நாளும் பரமனை நத்தியே தேடு

    வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த

    வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 6

     நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்

    நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே

    பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட

    பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7

     வேத விதிப்படி நில்லு - நல்லோர்

    மேவும் வழியினை வேண்டியே செல்லு

    சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்

    சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8

     பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்

    பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே

    இச்சைய துன்னையாளாதே - சிவன்

    இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

     மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த

    வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

    அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை

    அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

     மெய்குரு சொற்கட வாதே - நன்மை

    மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே

    பொய்க்கலை யால்நடவாதே - நல்ல

    புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 11

     கூடவருவ தொன்றில்லை - புழுக்

    கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை

    தேடரு மோட்சம தெல்லை - அதைத்

    தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

     ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த

    ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு

    முந்தி வருந்திநீ தேடு - அந்த

    மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

     உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை

    ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை

    கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்

    கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

     காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்

    கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?

    பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல

    பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

     பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்

    போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்

    மெய்யாக வேசுத்த காலம் - பாரில்

    மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

     சந்தேக மில்லாத தங்கம் - அதைச்

    சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;

    அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்

    ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

     பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்

    பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி

    சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்

    சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

     அன்பெனும் நன்மலர் தூவிப் - பர

    மானந்தத் தேவியின் அடியிணை மேவி

    இன்பொடும் உன்னுட லாவி - நாளும்

    ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

     ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்

    கான வழியை யறிந்து நீகொண்டு

    சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி

    சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

     ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்

    தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்

    வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்

    வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

     எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை

    எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து

    வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த

    வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

     இந்த வுலகமு முள்ளு - சற்றும்

    இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு

    செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்

    சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

     பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்

    போதகர் சொற்புத்தி போத வாராதே!

    மையவிழி யாரைச் சாராதே - துன்

    மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

     வைதோரைக் கூடவை யாதே: - இந்த

    வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே

    வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை

    வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

     சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்

    தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே

    தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல

    சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

     பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்

    பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே

    வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்

    வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

     போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்

    புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;

    சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்

    தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

     கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி

    காட்டி மயங்கிய கட்குடி யாதே!

    அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி

    அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29

     பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த

    பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்

    சத்திய மென்றதை யீட்டி - நாளும்

    தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

     செப்பரும் பலவித மோகம் - எல்லாம்

    சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்

    ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்

    ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

     எவ்வகை யாகநன் னீதி - அவை

    எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி

    ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்

    ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

     கள்ள வேடம் புனையாதே - பல

    கங்கையி லேயுன் கடன் நனையாதே

    கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு

    கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

     எங்கும் சுயபிர காசன் - அன்பர்

    இன்ப இருதயத் திருந்திடும் வாசன்

    துங்க அடியவர் தாசன் - தன்னைத்

    துதிக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34


    கடுவெளிச் சித்தர் குறிப்பு

  •     கடுவெளி என்பது வாக்கும் மனமும் கடந்த நிலையில் உள்ள பரவெளி குறித்துப் பாடுவதால் இப்பெயர் பெற்றார்.
  •     இவர் பாடியது 34 கண்ணிகள் கொண்டதொரு ஆனந்தக் களிப்பு.
  • நந்தவ னத்திலோர் ஆண்டி என்ற பெரும்புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்
  • இவர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • தன் செயலுக்குக் காரணமான மனத்திடம் கூ றுவதைப் போலப் பாடல்களைப் பாடி மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் 
மனித வாழ்வு மேன்மை அடைய கடுவெளிச்சித்தர் கூறும் அறிவுரைகள் யாவை?

  • மனமே! உயிர்களைத் துன்புறுத்தும் பாவச் செயலைச் செய்யாதே. 
  • அப்படிப்பட்ட செயலைச் செய்வாயானால் எமன் உன் மீது கோபம் கொண்டு உயிரைக் கொண்டு சென்று விடுவான். 
  • ஒருவரை துன்பம் தரும் வார்த்தைகளால் சபிக்கக் கூடாது. 
  • தீமை செய்தவர்களுக்கும் சாபம் தரக்கூடாது. 
  • விதியை நம்மால் தடுக்க முடியாது. 
  • கோபம் பலவீனத்தின் அடையாளம் அதனால் கோபப் படக்கூடாது. 
  • பிறரது ஆசையை தூண்டும் பேச்சையோ செயல்களையோ செய்யக் கூடாது.

  • பொய் சொல்லக் கூடாது
  • சூதினைத் தவிர்க்க வேண்டும்
  • பிறரை ஏமாற்றுதல் போன்ற நேர்மையற்ற செயல்களைச் செய்தல் கூடாது. 
  • இவற்றைச் செய்பவர்கள் நரகத்தை அடைவார்கள்
  • இவற்றைச் செய்தால் உறவினர்கள் நண்பர்கள் உன்னை விட்டு விலகி விடுவர். 
  • நல்ல பழக்க வழக்கங்கள், பக்தி, உண்மை இவைகள் நாளும் நன்மை தரும்
  • இவை இருந்தால் அனைவரும் நட்புடனும் நேசத்துடனும் இருப்பர்
  • எனவே இறைவன்பால் பக்தி கொண்டு,  வாழ வேண்டும். 
  • தண்ணீரின் மேல் நீர்க்குமிழி தோன்றி உடனே அழிந்துவிடும். 
  • அதுபோல நம் உடலும் தோன்றியவுடன் அழிவது உறுதி. 
  • எல்லா உயிர்களையும் நேசிப்பது பற்றற்று இருப்பதற்கான வழியாகும்

  • பற்று நீங்குவது மறுபிறப்பை அடைக்கும் வழியாகும்.

  • உடல் பெற்றதன் நோக்கம் இறைவனை அடைதல். 

  • எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்தல்.

  • ஆனால் அதை செய்யாமல் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்கி உடலை நோய் துன்பம் துயரங்களுக்கு ஆட்படுத்தி தன்னையே அழித்துக் கொள்கிறான்.

  • எனவே இந்த உடல் அழிகின்ற தன்மை உடையது என்று உணர்ந்து இறைவனை வணங்க வேண்டும். 
  • யாரையும் இழிவாகப் பேசுதல் கூடாது. 
  • பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை என்ற மூன்றும் பொல்லாதவை. இவற்றை விட்டு விட வேண்டும். 
  • சிவனை அன்பு கொண்டு வணங்கினால் எமன் நம்மை நெருங்குவதில்லை. 
  • நன்மையான வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். 
  • எந்நேரமும் இறைவனை நினைத்திருக்க வேண்டும். 
  • அறிவுள்ள பெரியோருடன் கூடியிருக்க வேண்டும். 
  • வள்ளலாகிய இறைவனை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும். 
  • உத்தமர்களான பெரியோர்களின் உறவைக் காத்துக் கொள்ள வேண்டும். 
  • தருமங்கள் முப்பத்திரண்டையும் தவறாது செய்ய வேண்டும். 
  • பிச்சை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்
  • தீமையானவற்றைப் பின்பற்றாது இருக்க வேண்டும். 
  • பொய் பேசுதல், கோள் சொல்லுதல் இவற்றை நீக்க வேண்டும்.  
  • வேதங்களில் கூறப்பட்டுள்ள நன்மையான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
  • பெரியோர்கள் காட்டிய வழிகளில் விருப்பமுடன் செல்ல வேண்டும். 
  • மன அமைதி தரும் வார்த்தைகளை மட்டும் பேச வேண்டும். 
  • கொடுமையான கோபத்தை அழிக்க வேண்டும்.
  • மெய்ஞானத்தை விரும்பி அந்த வழியில் முன்னேற வேண்டும்
  • வேதாந்தங்கள் கூறும் வெட்ட வெளியான இறையடியை நாடி இன்புற்று வாழ வேண்டும்
  • அஞ்ஞான மார்க்கத்தை விட்டு விலக வேண்டும் 
  • உன்னை நாடி வருபவர்களுக்கு ஆனந்தம் (இறையை நாடும்) கொள்வதற்கான வழியை கூறி வழிநடத்த வேண்டும் 
  • இதுதான் உண்மையா? இதுதான் நானா? என இடைவிடாமல் ஆராய்சி செய்வதுதான் ஞான மார்க்கம். 
  • அந்த வழியில் செல். 
  • உன் உண்மை இயல்பை உணர்ந்து கொள்.
  • அஞ்ஞானமாகிய அறியாமையை விலக்கு. 
  • உண்மையை தேடி உன்னை தேடி செல் எனப் பிறருக்கு வழிகாட்ட வேண்டும் 
  • காசிக்குப் போனாலும் கங்கையில் நீராடினாலும் பாவங்கள் போகாது. 
  • நாம் செய்யும் நல்வினையும் தீவினையும் தொடர்ந்து வரும் 
  • ஒருவன் தாமே உழைத்து பாடுபட்டு முன்னேற வேண்டியிருக்கிறது. 
  • அவர்களுக்குத்தான் கடவுளின் அருள் கிடைக்கும். க
  • கடவுளை வணங்க நாம் கடமைப்பட்டவர்கள்  
  • நிலையாக இருப்பது இறைவன் அதுதாட் உண்மை
  • மற்றவையெல்லாம் நிலையில்லாதவை. 
  • அவைகளை சார்ந்தால் அழிவு நிச்சயம். 
  • உண்மையை சார்ந்தால் மரணமில்லா பெருநிலையை அடையலாம். 
  • உண்மையை அடைய இரண்டு வழிகள் உள்ளன. 
  • ஒன்று பக்தி மற்றொன்று ஆராய்ச்சி(தியானம்) 
  • இரண்டுமே முடிவில் ஒரே உண்மையைத்தான் அடைகின்றன. 
  • வீடு பேற்றை அடைவதற்கு முழு தியாகமே வழி. 
  • அங்கிங் கெனாதபடி நீக்க மற எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் அன்பு நிறைந்து நிற்கும் இதயத்தில் வாசம் செய்கிறான். 
  • அவன் அடியவர்களுக்கு தாசன். 
  • இறைவனை நினைப்பவர்கள் இன்ப பேற்றை அடைவார்கள்.
  • என்று கடுவெளி சித்தர் உலக நிலையாமையை உணர்ந்து நிலையான இறைவனை நாடுவதே பேரின்பம் என்று அறிவுறுத்துகிறார்
---------------------------------------------------------------------------------------------------------------------

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி