சிறப்புத் தமிழ் - தமிழ்த்தெய்வ வணக்கம் - பேராசிரியர் பெ.சுந்தரனார்
தமிழ்த்தெய்வ
வணக்கம்
- பேராசிரியர் பெ.சுந்தரனார்
பேராசிரியர் பெ.சுந்தரனார் - ஆசிரியர் குறிப்பு
- பேராசிரியர் பெ.சுந்தரனார் 1855 ஆம் ஆண்டு ஆலப்புழையில் பிறந்தார்.
- பெற்றோர் திரு பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள்.
- திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் பயின்ற இவர் அக்கல்லூரியிலேயே தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
- தமிழன்னைக்குச் சிறப்பு சேர்க்க விழைந்து மனோன்மணீயம் என்ற ஒப்பற்ற நாடக நூலை 1891ஆம் ஆண்டு வெளியிட்டார்.
- இந்நாடகம் ஆங்கிலத்தில் லிட்டன் பிரபு எழுதிய இரகசியவழி (The
secret way) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.
மனோன்மணீயம் – குறிப்பு
- மனோன்மணீயம் என்ற நாடக நூலை இயற்றியவர் பேராசிரியர் பெ.சுந்தரனார்.
- இந்நாடகம் ஆங்கிலத்தில் லிட்டன் பிரபு எழுதிய இரகசியவழி (The secret
way) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.
- பின்னர் தோன்றிய நாடக நூல்களுக்கு முன்னோடியாக வழிகாட்டியாக இந்நூல் விளங்குகின்றது.
- இந்நூலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ளது
பாடல்
நீராரும் கடலுடுத்த
நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத்
திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும்
தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல்
அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும்
புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை
செயல் மறந்து வாழ்த்துமே வாழ்த்துமே
கடல்குடித்த குடமுனி உன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே
ஒரு பிழைக்கா அரனார்முன் உரை இழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே
சதுமறை ஆரியம் வருமுன் சகம்முழுதும் நினதுஆயின்
முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே
வேகவதிக்கு எதிர்ஏற விட்டது ஒரு சிற்றேடு
காலநதி நினைக்கரவா காரணத்தின் அறிகுறியே
கடையூழி வருந்தனிமை கழிக்க அன்றோ அம்பலத்துள்
உடையார் உன்வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே
தக்கவழி விரிந்திலங்கும் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலம் சிறந்த உன் மெய்ச்சரித வியஞ்சனமே
தக்கவழி விரிந்திலங்கும் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலம் சிறந்த உன் மெய்ச்சரித வியஞ்சனமே
விளக்கம்
- நீர் நிறைந்த கடலை ஆடையாக உடுத்திக் கொண்டிருக்கும்
நிலமகளுக்குச் சிறப்புப் பொருந்திய முகமாகத் திகழ்வது பரத கண்டம்.
- அம்முகத்தின்கண் அமைந்துள்ள பிறைச் சந்திரன்
போன்ற நெற்றியாகத் திகழ்வது தென்னிந்தியா.
- அந்நெற்றியின்கண் அமைந்துள்ள திலகமாக விளங்குவது
திராவிடத் திருநாடு.
- அத்திலகத்தின் நறுமணம் போல உலகம் முழுவதும்
இன்புற எத்திசையும் புகழ் மணக்கும் இயல்புடையது தமிழ்த்தெய்வமாகும்.
- இவ்வாறு நிலத்தைப் பெண்ணாகவும், பாரதத்தைத்
திருமுகமாகவும்,
- தென்னிந்தியாவை நெற்றியாகவும், திராவிட நாட்டைத்
திலகமாகவும், தமிழைத் தெய்வமாகவும் உருவகித்து, திலகத்தின் மணத்தைத் தமிழ் மணமாக்கிக்
காட்டுகின்றார் பேராசிரியர்.
தேவர்களுக்கும் அரசர்களுக்கும் போர் நடைபெற்றபோது விருத்திராசுரன் கடலுக்கு
அடியில் ஒளிந்து கொண்டான். இந்திரன் அவனைத் தேடிச் சென்றான்.
அகத்தியரிடம் இந்திரன் முறையிட அகத்தியர்
கடல் நீரை ஒரு கையால் பருகினார்.
அசுரனை இந்திரன் கொன்றான்.
இவ்வாறு எல்லையற்ற கடலின் ஆழத்தையே கண்ட அகத்தியர் தமிழின் ஆழத்தை அறிய குருவாக
இறைவனை நாடினார் எனில் கடலுக்குத் தமிழை உவமையாகக் கூறுவது புகழாகாது.
பாண்டியன் தன் ஐயத்தைப் போக்குவோர்க்குப் பரிசு அறிவித்திருந்தான்.
அதனைப் பெற விரும்பிய புலவர் தருமிக்குச் சிவபெருமான் “கொங்குதேர் வாழ்க்கை”
என்னும் பாடலை இயற்றித் தந்தார். அப்பாடலில் பொருட்குற்றம் உள்ளது என நக்கீரர் இறைவனிடம்
வாதாடினார்.
அவர் முன் இறைவன் உரை இழந்து விழித்தார்.
நெற்றிக் கண்ணைக் காட்டினார். நக்கீரரோ நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம்
குற்றமே என வாதாடினார். இவ்வாறு தாம் செய்த ஒரு பிழைக்காக நக்கீரர் முன் இறைவனே பொருள்
தெரியாமல் திணறினார் எனில் தமிழின் இலக்கணம் மிகவும் அரியது என்பதை உணர முடிகின்றது.
ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்று கூறப்படுகுின்ற வேதங்கள் வடமொழியில் தோன்றுவதற்கு
முன்பே இந்த உலகம் முழுவதும் தமிழ்மொழி பரவிவிட்டது. எனவே தமிழ்மொழி எல்லா மொழிகளுக்கும்
மூலமொழியாக முதுமொழியா விளங்குகிறது.
மதுரையில் சமணர்களுக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையே புனல் வாதம் நடைபெற்றது.
யாருடைய ஏடு ஆற்றின் போக்கை எதிர்த்துக் கரையேறுகின்றதோ அவர்தம் சமயமே உண்மை
என்பது நிறுவப்படும். அதன்படி சமணர்களும் ஞானசம்பந்தரும் தத்தம் சமயக் கருத்துகள் அடங்கிய
ஏடுகளை வையை ஆற்றில் விட்டனர்.
திருஞானசம்பந்தருடைய ஏடு ஆற்றில் எதிர் ஏறி கரை சேர்ந்தது. இச்செயலால் தமிழை
யாராலும் அழிக்க இயலாது என்பது உணரப்படுகிறது.
தமிழ் வாசகமாகிய திருவாசகத்தின் பெருமையை அறிந்து இறைவனே திருவாசகத்தின் ஒரு பிரதியை எடுத்து வைத்துக் கொண்டார்.
இது ஒன்றே தமிழின் பெருமையை உணர்த்த போதுமானது.
கற்றறிந்தாரின் தமிழ்ப் புலமையைச் சங்கப் பலகையானது புலமை உடையோரின் தகுதிக்கு ஏற்ப விரிந்து புலமையை
வெளிபடுத்தும் தன்மை உடையது மதுரைச் சங்கப் பலகையாகும். இது தமிழின் சிறப்பினை விளக்கும்
தன்மையில் உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக