தமிழ்விடுதூது
ஊ. தமிழ்விடுதூது
1. சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண்
2. டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே
3. செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற்
4. கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா
5. மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே
6. மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால்
7. தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி
8. மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் – முட்டாதே
9. ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் – மல்காச்சொற்
10. பாத்திரங்கொண் டேபதிபாற் பாய்பசு வைப்பன்னிரண்டு
சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் –
தமிழ்விடு தூது குறிப்பிடும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக
மதுரையில் கோயில் கொண்டு விளங்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் தன் காதல் நோயைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுவதாக அமைந்த நூல் தமிழ்விடுதூது என்பதாகும். இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால்.
1.மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக வீற்றிருந்த சிவபெருமான்,
2.எல்லாத் திசைகளிலும் வெற்றியைத் தரும் தடாதகைப் பிராட்டியாகிய பார்வதி தேவி,
3.விருப்பத்துடன் சிவஞானத் திரட்டைக் கையிலெடுத்த கணபதி,
4.தமிழ்ச்சங்கத்தில் புலவர்களுக்கெதிராக அமர்ந்து பாடல் அறிவித்த முருகப்பெருமான்,
5.மூன்று வயதிலேயே பார்வதிதேவியின் அருளால் பாலருந்தி தமிழ்மொழியும் வடமொழியும் கற்றுத் தேர்ந்த திருஞானசம்பந்தர்,
6.மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய பிள்ளையைச் சிவபெருமானிடம் ஈன்று தரச் சொல்லிப் பாடல் இசைத்த சுந்தரர்,
7.பிரமனும் திருமாலும் தேடியும் அடைய முடியாத சிவனின் திருமுடியையும், திருவடியையும் தேடாமலேயே திருநல்லூரில் தேவாரம் பாடித் தன் தலை மீது முடியாகப் பெற்றுக் கொண்ட திருநாவுக்கரசர்,
8.சிவபெருமானே விரும்பி வந்து தம் ஓலையில் எழுதிக்கொள்ள திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர்,
9.முத்தமிழ் ஓதிய அகத்தியர்,
10.பழந்தமிழ் இலக்கணம் உரைத்தத் தொல்காப்பியர்,
11.சிவனைத் தேடிச்செல்லும் உயிர்கள் குறித்துத் தம் சிவஞானபோதத்தில் பன்னிரண்டு நூற்பாக்களில் விளக்கமுரைத்த மெய்கண்ட தேவர்,
.திருவிசைப்பா எனும் தீதில்லா கவிதைகளைத் தந்த திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது முனிவர்கள்,வினைகளால் வந்தடைகின்ற தந்திரங்களைத் திருமந்திரத்தால் நீக்கிய திருமூலர்,பொய்யடிமையில்லாப் புலவர்கள் என்று போற்றப்படும் சங்கத்துப் புலவர்கள் திருவள்ளுவர் எனக் கல்வி, கேள்விக்குரிய எல்லோரும், தமிழே! நீயாகவே இருக்கின்றாய். உன் பொன் போன்ற திருவடிகளைத் துதித்து வணங்கினால் என் இடர் தீரும் என்பதால் உன் பொன்னடிகளை நான் போற்றுகின்றேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக