சிலப்பதிகாரம் - காட்சிக்காதை
வஞ்சிக் காண்டம் 2. காட்சிக் காதை
மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி,
‘துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்’ என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,
வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு
விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்
பொலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும்,
இலங்கு நீர்த் துருத்தியும்,இள மரக் காவும்,
அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி;
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த
பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று;
கோங்கம், வேங்கை, தூங்கு இணர்க் கொன்றை,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம்,
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து,
மதுகரம், ஞிமிறொடு வண்டு இனம் பாட,
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து, ஒருங்கு இருப்ப-
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்,
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்,
தினைக் குறு வள்ளையும், புனத்து எழு விளியும்,
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்,
பறை இசை அருவிப் பயம் கெழும் ஓதையும்,
புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்,
கலி கெழு மீமிசைச் சேணோன் ஓதையும்,
பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்,
இயங்கு படை அரவமோடு, யாங்கணும், ஒலிப்ப-
அளந்து கடை அறியா அருங்கலம் சுமந்து,
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து,
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது,
திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல;
யானை வெண் கோடும், அகிலின் குப்பையும்,
மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்,
சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும்:
ஏல வல்லியும், இருங் கறி வல்லியும்,
கூவை நூறும், கொழுங் கொடிக் கவலையும்,
தெங்கின் பழனும், தேமாங் கனியும்,
பைங் கொடிப் படலையும், பலவின் பழங்களும்,
காயமும், கரும்பும், பூ மலி கொடியும்,
கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும்,
பெரும் குலை வாழையின் இருங் கனித் தாறும்;
ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்,
வாள்வரிப் பறழும், மத கரிக் களபமும்,
குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும்,
வரை ஆடு வருடையும், மட மான் மறியும்,
காசறைக் கருவும், ஆசு அறு நகுலமும்,
பீலி மஞ்ஞையும், நாவியின் பிள்ளையும்,
கானக்கோழியும், தேன் மொழிக் கிள்ளையும்;
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-
ஆங்கு,"
ஏழ் பிறப்பு அடியேம்; வாழ்க, நின் கொற்றம்!
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி,
வானவர் போற்ற மன்னொடும் கூடி,
வானவர் போற்ற, வானகம் பெற்றனள்;
எந் நாட்டாள்கொல்? யார் மகள்கொல்லோ?
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்!’ என-
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு
கண் களி மயக்கத்துக் காதலோடு இருந்த
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும்:
‘ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம்,
திண் திறல் வேந்தே! செப்பக் கேளாய்;
தீவினைச் சிலம்பு காரணமாக,
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்;
வலம் படு தானை மன்னன் முன்னர்,
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்;
செஞ் சிலம்பு எறிந்து, தேவி முன்னர்,
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி,
‘அம் சில் ஓதி! அறிக” எனப் பெயர்ந்து,
முதிரா முலைமுகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்;
“அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன்,
மயங்கினன்கொல்” என மலர் அடி வருடி,
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்,
கலக்கம் கொள்ளாள், கடுந் துயர் பொறாஅள்,
“மன்னவன் செல்வுழிச் செல்க யான் என
தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள்போல்,
பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;
“கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று” எனக் காட்டி, இறைக்கு உரைப்பனள்போல்,
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள்,
நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை’ என்று,
ஒழிவு இன்றி உரைத்து, ‘ஈண்டு ஊழி ஊழி
வழிவழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம்’ என-
தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்:
‘எம்மோரன்ன வேந்தற்கு’ உற்ற
செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன்,
‘உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு’ என,
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது:
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்;
பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல்’ என,
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த
நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-
‘ஆங்கு,"
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும்,
செயிருடன் வந்த இச் சேயிழை-தன்னினும்,
நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்?’ என,
மன்னவன் உரைப்ப- மா பெருந்தேவி,"
‘காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்’ என-
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி,
நூல் அறி புலவரை நோக்க, ஆங்கு அவர்,
‘ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்,
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்துக்
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப் பேர் யாற்றினும், காவிரிப் புனலினும்,
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து’ என-
‘பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று;
புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்,
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை
நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு’ என,
‘குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும்,
வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
புட்கைச் சேனை பொலிய, சூட்டி;
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்’ என-
‘பல் யாண்டு வாழ்க, நின் கொற்றம்,ஈங்கு!’என,
வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்:
‘நும் போல் வேந்தர் நும்மொடு இகலி,
கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி
பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன;
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல் வேல்கட்டியர்,
வட ஆரியரொடு, வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேட்டம் என் கண்- புலம் பிரியாது;
கங்கைப் பேர் யாற்றுக் கடும் புனல் நீத்தம்,
எம் கோமகளை ஆட்டிய அந் நாள்,
ஆரிய மன்னர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செரு வெங் கோலம்
கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம்:
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை;
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது
கடவுள் எழுத ஓர் கற்கே; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்
தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,
மண் தலை ஏற்ற வரைக, ஈங்கு, என-
‘நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா;
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே
தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறை பறை’ என்றே அழும்பில் வேள் உரைப்ப-
நிறை- அரும் தானை வேந்தனும் நேர்ந்து,
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்கபின்-
‘வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!
ஊழிதொறு ஊழி உலகம் காக்க’ என,
‘வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம்
இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்,
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும்,
விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்,
கேட்டு வாழுமின்; கேளீர் ஆயின்,
தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்;
தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி,
வாழ்க, சேனாமுகம்!’ என வாழ்த்தி,
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி,
அறை பறை எழுந்ததால், அணி நகர் மருங்கு- என்.
சிலப்பதிகாரம் குறிப்பு தருக
- சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.
- சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது. இந்நூல் பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம் எனவும் வழங்கப்படும்.
- இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம். இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
- ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் ஆவார்.
- புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களை உடையது.
- இது 10 காதைகளைக் கொண்டது.
இளங்கோவடிகள் குறிப்பு தருக
- சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆவார்.
- இவர் சிலப்பதிகாரம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.
காட்சிக்காதை விளக்கும் செய்திகள்
சேர மன்னன் செங்குட்டுவனின் குலப்பெருமை
“வாய்வாள் கோதை" எனப் போற்றப்படும் சேரமன்னன் செங்குட்டுவன் ஆவான்
அவன் கடலில் கடம்பர்களை வென்று அவர்களின் காவல் மரம் கடம்பை வெட்டி வீழ்த்திய சேரர் குடியில் வந்தவன்.
இமய மலையில் வானவர்கள் மருளும்படி, தன் வில் சின்னத்தைப் பொறித்தவனின் வழிவந்தவன்.
அரண்மனை மாடத்தில் மன்னன் வீற்றிருத்தல்
சேரமன்னன் செங்குட்டுவன் தன் "இலவந்தி" என்னும் அரண்மனை மாடத்தில் தன் மனைவி இளங்கோ வேண்மாள் என்பவளுடன் வீற்றிருந்தான்.
அரசன் மலைவளம் காணப் புறப்படுதல்
முரசம் போல அருவி ஒலிக்கும் மலை வளம் காண தன் தலைநகர் வஞ்சிமுற்றத்தை விட்டுப் புறப்பட்டான் மன்னன்.
ஆற்றங்கரைக்குச் செல்லுதல்
வளமையான பூஞ்சோலையில் வானுலக மகளிரோடு விளையாட வேண்டும் என விரும்பிய வானவன் பேரியாற்றங்கரைக்குச் சென்றான்.
அங்கே அழகிய காடு, ஆறு, மரங்கள், மணல் திட்டுகள், படுப்பதற்கு ஏற்ற இடங்கள் அனைத்தும் பரவிக் கிடந்தன. அது 140 யோசனை தொலைவு விரிந்து பரந்திருந்தது. அந்த இடத்துக்கு மிகப் பெரிய யானை ஒன்றன்மீது ஏறிக் கண்டு களித்தவண்ணம் சென்றுகொண்டிருந்தான். கோங்கம், வேங்கை, கொன்றை, நாகம், போன்ற மரத்தின் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. நீர் ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்தது. தேனீ, வண்டு போன்றவை பாடிக்கொண்டிருந்தன. மேலை மலையிலிருந்து இறங்கும் பேரியாறு திருமால், முருகன் மார்பில் இருக்கும் மாலை போல, விளங்கிற்று. அதன் மணல் பரப்பில் தன் அரசுச் சுற்றம் சூழ அமர்ந்திருந்தான்.
மலையில் கேட்ட ஒலிகள்
குன்றக் குறவர் ஆடும் குரவை ஒலி, குறத்தியர் பாடல் ஒலி, வேலன் முருகனைப் பாடும் ஒலி, தினை குற்றும் மகளிர் தன் வளையல் ஒலிக்கேற்ப பாடும் வள்ளைப்பாட்டின் ஒலி, காட்டு மலையில் கேட்கும் ஒலி, குறவர் தேன் எடுக்கும் ஒலி, பறை போல் முழங்கும் அருவி ஒலி, புலியும் யானையும் போரிட்டுக்கொண்டிருக்கும் ஒலி, பரண் மீது ஏறி இருந்துகொண்டு யானைகளை ஓட்டும் ஒலி, தன் பொய்க்குழியில் விழுந்த யானையைப் பாகர் பழக்கும் ஒலி, அரசனிடன் சென்ற படையின் ஒலி - ஆகியவை எங்கும் கேட்டுக்கொண்டிருந்தன.
குறவர் மன்னனைக் காண வருதல்
திறை கொண்டுவந்த பகையரசர்கள் வஞ்சி முற்றத்தில் மன்னனைக் காணமுடியாமல் மலையில் மன்னனைக் காண வந்திருப்பது போன்று, குன்றக் குறவர்கள் மன்னனைக் காண வந்தனர்.
குறவர்கள் மன்னனைக் காணக் கொண்டு வந்த பொருள்கள்
யானைத்தந்தம், அகில், கவரிமான் மயிர், மதுக்குடம், சந்தனக் கட்டை, சிந்துரக் கட்டி (சாம்பிராணி), மை தீட்டும் அஞ்சனம், அரிதாரம் (வாசனைத்திரவியம்), ஏலக்காய், மிளகு, தேங்காய், மாம்பழம், பெருங்காயம், கரும்பு, பூச்சரம், பாக்குக் குலை, வாழைப்பழத் தார், ஆளிக்குட்டி, சிங்கக்குட்டி, பன்றிக்குட்டி, யானைக்குட்டி, குரங்குக் குட்டி, கரடிக்குட்டி, வரையாடு, மான்குட்டி, அணில் பிள்ளை, கீரிப்பிள்ளை, மயில், நவ்விமான் குட்டி, காட்டுக் கோழி, கிளி - ஆகியனவற்றைத் தலையில் சுமந்துகொண்டு மலைமக்கள் மன்னனைக் காண வந்தனர். அங்கு மன்னனைக் காணக் காணிக்கைப் பொருள்களுடன் வந்த மலைக்குறவர் மன்னனைக் கண்டு, கண்ணகி பற்றிய செய்தியைக் கூறினர்.
குறவர்கள் மன்னனுக்கு அறிவித்த செய்தி
"மன்னவ, ஏழு பிறப்பிலும் நாங்கள் உன் அடியவர்கள். உன் ஆட்சி வாழ்வதாகுக! வேங்கை மரத்தடியில் ஒரு பெண் வந்து நின்றாள். தன் கொங்கை ஒன்றை இழந்த நிலையில் இருந்தாள். பெருந் துயரத்துடன் காணப்பட்டாள். வானவர் போற்ற வந்தாள். தன் மன்னன் கணவனுடன் கூடி, வானவர் போற்றும் வண்ணம் வானகம் சென்றுவிட்டாள். அவள் எந்த நாட்டவளோ, யார் மகளோ, ஒன்றும் தெரியவில்லை. உன் நாட்டுக்கு வந்தாள். இப்படி ஒன்று நிகழும் என்று நாங்கள் நினைத்துப் பார்த்தது இல்லை. பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்வாயாக" - என்று சொல்லி மன்னனை வாழ்த்தினர்.
சீத்தலைச் சாத்தனார் மன்னனுக்கு உரைத்த செய்தி
வேந்தே! அந்தப் பெண்ணுக்கு நேர்ந்ததை எல்லாம் நான் சொல்கிறேன். கேளுங்கள். தீவினை, சிலம்பு வழியில் தோன்றியது. சிலம்பு காரணமாக அவள் கணவன் கொலை செய்யப்பட்டான். அவள் சிலம்புடன் சென்று மன்னன் முன் வழக்கு உரைத்தாள். சிலம்பை அரசி முன்னர் உடைத்து அவள் வஞ்சினம் கூறினாள். தன் கொங்கையைக் கிள்ளி எறிந்து மதுரையை எரித்துத் தான் மாபெரும்பத்தினி என மக்களுக்கு உணர்த்தினாள்.
அரியணையில் இருந்த பாண்டியன் கண்ணகியின் துயரம் கண்டு பொறுக்க முடியாதவனாக மயங்கினானோ என்று எண்ணிக்கொண்டிருக்கையில், கண்ணகியின் நெடுமொழி கேட்டு, மன்னவனாகிய தன் கணவனின் காலடியைப் பற்றிக்கொண்டு, "மன்னவன் சென்ற வழியே யானும் செல்வேனாகுக" என்று சொல்லிக்கொண்டு, தன் உயிரைக் கொடுத்து அவன் உயிரைத் தேடுபவள் போலப் பெருங்கோப்பெண்டு கணவனுடன் மாண்டாள்.
இந்தச் செய்தியை எல்லாம் தன் நாட்டுக்குக் கொண்டு செல்லாமல், உன்னிடம் முறையிட்டுக்கொள்பவள் போல அவள் உன் நாட்டுக்கு வந்தாள். - இவ்வாறு நிகழ்ந்தவை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சாத்தனார் சேரனுக்கு எடுத்துரைத்தார்.
இறுதியில் ஊழூழி காலம் சேரன் ஆட்சி சிறக்க வேண்டும் என வாழ்த்தினார்.
சேர மன்னனின் வருத்தம்
பாண்டியனுக்கு நேர்ந்த தீங்கினைக் கேட்ட சேரன் வருந்திக் கூறலானான்.
பாண்டியன் செங்கோல் தவறியது என் போன்ற மன்னர் செவிக்கு எட்டுவதற்கு முன்னர் பாண்டியன் உயிர் சென்றுவிட்டது. அந்த உயிர் அவனது வளைந்த கோலை நிமிர்த்தி நிறுத்திச் செங்கோலாக மாற்றிவிட்டது.
மழை பொழியாவிட்டால் அச்சம்.
மக்களுக்குத் துன்பம் நேர்ந்தால் அச்சம்.
இப்படி அஞ்சிக்கொண்டு மக்களைக் காக்கும் பொறுப்புள்ள அரசர் குடியில் பிறத்தலானது, துன்பமே அல்லாமல் தொழும் தகைமை உடையது அன்று
- என்று சாத்தனாரிடம் சேரன் கூறினான். சாத்தனாரிடம் மன்னர் ஆட்சிப் பொறுப்பு துன்பமுடையது என்று கூறிய சேரன் தன் மனைவியிடம் ஒன்று வினவினான்.
அரசன் அரசியிடம் வினவுதல்
இரண்டு பெண்களில் ஒருத்தி கணவன் உயிருடன் தன் உயிரையும் கொடுத்துவிட்டாள். மற்றொருத்தி சினத்துடன் இந்த நாட்டுக்கு வந்தாள்.
இந்த இரண்டு பெண்களில் பெண்கள் வியக்கும் பெருந்தகைமை உடையவர்
யார்? - என மனைவி வேண்மாளிடம் வினவினான்.
பாண்டியன் தேவி காதலனின் துன்பத்தைக் காணாமல் காதலனுடன் தானும்
சென்ற பெருந்திரு உடையவள். வானுலகிலும் அவள் கற்பு சிறந்திருக்கும்.
நம் நாட்டுக்கு வந்த பத்தினிக் கடவுளை நாம் பாராட்டி வாழ்த்த வேண்டும்.
இவ்வாறு சேரன் மனைவி, அரசி வேண்மாள் கூறினாள்.
சிற்பக் கலைஞன் கூறிய செய்தி
வெண்கொற்றக் குடையால் ஆட்சிநிழல் தரும் மன்னவன் சிற்பக் கலைஞனை நோக்கினான். மன்னன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட கலைஞன் "மரபு முறைமையில் பார்த்தால், பொதிய மலையிலிருந்தோ, இமய மலையிலிருந்தோ கடவுள் சிலை வடிக்கக் கல்லைக் கொண்டுவரலாம். கல்லைக் காவிரி ஆற்றிலோ, கங்கை ஆற்றிலோ நீராட்டலாம். இரண்டுமே தகவு உடைத்து - என்று கூறினான்.
பொதிய மலையில் கல்லைக் கண்டெடுத்து, காவிரியில் நீராட்டிக் கொண்டுவருதல் எம் போன்ற மறக்குடி மன்னர்க்குச் சிறப்புடைய செய்கை ஆகாது.
சடைமுடியும், ஈரம் புலராமல் உடுத்திக்கொண்டிருக்கும் ஆடையும், முந்நூல் என்னும் பூணூல் தரித்த மார்பும் கொண்டு முத்தீ வளர்க்கும் செல்வத்தைப் பெற்றிருக்கும் இருபிறப்பாளராகிய பார்ப்பாரோடு சேர்த்து, இளமையிலேயே மாட்சிமை பெற்ற கண்ணகிக்குச் சிலை அமைக்க, மலையரசன் ஒரு கல்லை என்னைப் போன்ற வேந்தன் கொண்டு வந்து தாரான் என்றால், வழிவழியாகப் புகழ் நிலைத்து நிற்கும் உடம்பு இல்லாமல் மாண்டுபோனவர் நீங்களும் என்னைப் போல் இறந்து போவீர்கள் என்று இறந்தவர்கள்இறக்காமல் இருப்பவர்களுக்குக் காட்டிய இரங்கல் வஞ்சி வாழ்க்கை
உடையேன் ஆகுக.
மன்னன் இமயமலைக்குச் செல்லுதல்
தென் திசையில் உள்ள என் வஞ்சியில் இருந்துகொண்டு, வடதிசை பற்றிக் கனவு காணும் பெருங்காஞ்சி உடையவனாக எள்ளப்படுவேன் ஆகுக.
நிலா தலையில் சூடிய மாந்தரோடு (இமய மலை அரசர்) வேங்கை மலர் சூடிய என் வீரர்கள் மேம்படுதலை நான் காண்பேன் - என்று சொல்லிக்கொண்டு மன்னன் புறப்பட்டான்.
குடைநிலை வஞ்சி,
கொற்ற வஞ்சி,
மாராய வஞ்சி,
வென்றவர் விளங்கும் வியன்பெரு வஞ்சி,
ஆகிய விருதுகளைப் பெற்றவர்களும் உடன் புறப்பட்டனர்.
இவர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கும் சிறப்பு விருந்து நிழ்ச்சியும் நடைபெற்றது.
பகைவர் கொற்றம் வளைந்ததைப் பாடும் கொற்றவள்ளை பாடப்பட்டது.
படை வீரர்கள் பனம்பூ மாலை சூடினர்.
பூக்காத வஞ்சியாகிய வஞ்சிமா நகரை விட்டுப் படை புறப்பட்டது.
அனைவரும் நாட்டை விரிவுபடுத்தும் வஞ்சிப் போருக்கான வஞ்சிப் பூ சூடுவோம் என்று சேரன் முழங்கினான்.
சேரனின் படைத்தலைவன் கூற்று
வில்லவன் கோதை என்பவன் சேரனின் படைத்தலைவன். அவன் அரசனிடம் கூறுகிறான்,
அரசே! உன் வெற்றி பல்லாண்டு வாழ்வதாகுக.
உன்னைப் போன்ற தமிழக வேந்தர் உன்னை எதிர்த்துக் கொங்கர் செங்களப் போரில் தம் புலிக்கொடியையும், கயல்மீன் கொடியையும் அந்தப் போர்க்களத்திலேயே இழந்துவிட்டனர். என்றாலும் அந்த வெற்றி திசைகாக்கும் யானையின் வாயில் பட்டு மறைந்து போயின.
உன் வேட்டை - போர் வேட்டை - கடமலை என்னும் காட்டுமலையாகிய விந்திய மலை வேட்டை - கொங்கர், கலிங்கர், கருநாடகர், பங்களர் (வங்க தேயத்தவர்), கட்டியர், வட-ஆரியர் ஆகியோர் தமிழரை எதிர்த்துப் போராடிப் பட்ட பாட்டைக் கண்முன் நிறுத்தி மறக்காமல் இருக்கின்றனர்.
நீ முன்பொரு காலத்தில் எம் கோமகள் அரசியை கங்கை ஆற்றில் நீராடச் செய்தபோது ஆரிய மன்னர் ஆயிரம் பேர் எதிர்த்தபோது நீ போரிட்டதை எமனே கண்டு மலைத்துப் போனான்.
எனவே, வடதிசை மன்னர்கெல்லாம் ஓலை எழுக.
கண்ணகிக் கடவுளுக்குச் சிலை செய்ய ஒரு கல் கொண்டுவரவே வடதிசை இமயமலைக்கு வருவதாகச் சொல்லி ஓலை எழுதி அனுப்புக.
அமைச்சர்கள் மன்னனிடம் கூறிய செய்தி
அதனால், தென்தமிழ் நாட்டு வில், மீன், புலி - சின்னக் கொடிகளை மண்ணில் கொடி நட்டு ஏற்றுக - எனக் குறிப்பிட்டு ஓலை எழுதி அனுப்புக என்று அமைச்சன் கூறினான்.
நாவலந்தண்பொழில் என்னும் இந்தியாவில் உள்ள பன்னாட்டுப் பகையரசர்களின் ஒற்றர்களும் நம் வஞ்சி மாநகரில் இருக்கின்றனர். அவர்கள் நமக்கு முன் நாம் பேசிக்கொண்டதைப் போய்ச் சொல்லிவிடுவர். எனவே ஓலை அனுப்பவேண்டியதில்லை என்று அழும்பில்வேள் என்னும் மற்றொரு அமைச்சன் கூறினான்.
மலைவளம் கண்டு மன்னன் வஞ்சி நகருக்குத் திரும்புதல்
நிறுத்துவதற்கு இடம் இல்லாத பெரும் படை கொண்டவன் சேர வேந்தன். மலைவளம் காணவந்த அரசுச் சுற்றத்தை, பகைவர் நெருங்காத வஞ்சி நகர் திரும்ப ஆணையிட்டான். அனைவரும் வஞ்சிமாநகர் வந்தடைந்தனர். பறையறைய ஆணையிட்டான்.
வஞ்சி மாநகரில் பறை அறைந்து தெரிவிக்கப்பட்ட செய்தி
வாழ்க
எம் மன்னவன் வாழ்க
ஊழூழி தோறும் உலகைக் காப்பாற்றுவதற்காக வாழ்க
வில் சின்னத்தைத் தலையில் பொறித்துக் கொண்டிருக்கும் இமய மலையிலிருந்து ஒரு கல் கொண்டு வருவதற்காக, சேரன் புறப்படுகிறான்.
ஆதலால்
வடதிசையில் வாழும் மன்னர்கள் எல்லாம் திறையுடன் வந்து மன்னனைக் காணுங்கள்.
அப்படிக் காணாவிட்டால்,
சேரன் கடலில் கடம்பு மரத்தை வெட்டிய சொல்லையும்.
இமய மலையில் வில் சின்னம் பொறித்த சொல்லையும் கேட்டுக்கொண்டு
வாழுங்கள். கேட்காவிட்டால், உங்கள் மனைவியர் உங்கள் தோளைத் துறக்கும் நிலைமை எய்தி வாழவேண்டி வரும்.
மன்னன் கழல் வாழ்க
மன்னன் திருமேனி வாழ்க
மன்னன் படைமுகம் வாழ்க
இப்படிச் சொல்லி யானைமீது ஏற்றிய முரசை முழக்கிப் நகரில் பறை
அறிவிக்கப்பட்டது.
----------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக