செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்
செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்
1. ஒரு மொழி செம்மொழி தகுதி பெறுவதற்கு வேண்டிய தகுதிகள் யாவை?
ஒரு மொழி செம்மொழி என்னும் தகுதி பெறுவதற்கு மொழியியல் அறிஞர்கள் 11 அடிப்படை விதிகளை வகுத்துள்ளனர். அவையாவன,
1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாடு, கலை, அறிவு, பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லாத் தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு
போன்றவை ஆகும்.
2. தமிழின் சிறப்பியல்புகளை அறிஞர் அண்ணா எங்ஙனம் எடுத்துரைக்கிறார்?
- தமிழ்மொழி, காலத்தால் மிகமிகத் தொன்மையானது.
இலக்கண இலக்கியங்களை செவ்வனே பெற்றுள்ளது.
தூய்மையானது.
- துல்லியமாக எண்ணங்களை வெளிப்படுத்திடும் சொல்வளம் மிகவும் படைத்தது.
- உணர்வுகளை நுட்பமாகவும், நுண்ணியமாகவும், நேர்மையாகவும், நேர்த்தியாகவும் ஊட்டிடும் நயம் கொண்டது.
- எண்ணங்களை, கொள்கை கோட்பாடுகளைத் தெளிவாக உணர்த்தும் சொல்லாட்சி உடையது.
- சூடு, சுவை, சூட்சுமம், மதிநுட்பம் வாய்ந்த குறிப்புரை, விரிவுரை, விளக்கவுரை என அனைத்திற்கும் வழங்கும் சொற்களஞ்சியம் கொண்டது தமிழ் மொழி.
- தமிழ் இனியது, அழகியது, ஆற்றல் மிக்கது, வற்றாத ஊற்றான சொற்செறிவும் பொருட்செறிவும் நாகரிக நயமும் நேர்த்தியும் கொண்டது என்று அறிஞர் அண்ணா தமிழ்மொழியின் சிறப்பு குறித்து விளக்குகிறார்.
3. தமிழ்மொழியின் சிறப்பு குறித்துப் பரிதிமாற்கலைஞர் குறிப்பிடுவன யாவை?
- ஒரு மொழி தான் வழங்கும் நாட்டிலுள்ள பலமொழிகளுக்கு தலைமை மற்றும் மேதகவுடைமை உடையதாக இருக்க வேண்டும்.
- தமிழ் மொழி தெலுங்கு முதலிய எல்லா மொழிகளுக்கும் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடையதாகக் காணப்பெறுகிறது.
- தான் வழங்கும் நாட்டிலுள்ள மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் கொண்ட மொழி தமிழ்மொழி.
- பிற மொழிகளுக்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும். தமிழ் மொழியின் உதவி இல்லையெனில் தெலுங்கு முதலியன இயங்க முடியாது.
- தமிழ்மொழி தனித்து இயங்கவல்லது
போன்ற கருத்துகளை எடுத்துக்கூறித் தமிழ் மொழியின் சிறப்பினைப் பரிதிமாற் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
4. பரிதிமாற்கலைஞர் அவர்கள், செம்மொழிக்கு அளிக்கும் விளக்கம் யாது?
- பேசுபவன் கருதிய பொருளைக் கேட்பவன் தெளிவாக உணரும் வல்மையையும்,
- பழையன கழிந்து புதியன புகுந்து, திருத்தம் பெற்றும்,
- நாட்டின் நாகரிக முதிர்ச்சிக்கேற்ப சொற்களும் தோன்றி மொழியும் நாகரிக நலம் போன்றவற்றை உடையதாய் இருத்தல் வேண்டும்.
- அவ்வாறு சொற்கள் தோன்றும்பொழுது பிற மொழி சொற்கள் இடம்பெறக் கூடாது. பிற மொழி சொற்கள் கலப்பின்றி வழங்குவது மொழித்தூய்மை ஆகும். தொன்று தொட்டுத் தமிழ்மொழி இப்பண்புகளை எல்லாம் பெற்றிருக்கிறது என்று செம்மொழி பண்பு குறித்து விளக்கம் நல்குகிறார் பரிமாற் கலைஞர்.
5. தமிழறிஞர் பரிமாற் கலைஞர் பெற்ற சிறப்புகள் யாவை?
- தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமையாக்கி, 16.11.2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நினைவில்லமாக ஆக்கியது.
- அந்தப் பழைய இல்லத்தை 7 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்ச் செலவில் தமிழ்நாடு அரசு புதுப்பித்தது.
- நினைவில்லத்தின் முகப்பில் பரிதிமாற்கலைஞர் அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலையை 31.10.2007 அன்று திறந்துவைத்தது அரசு.
- நினைவில்லத்தில் அவரது வரலாற்றுக் குறிப்புகள், அரிய புகைப்படங்கள் ஆகியவற்றையும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
- பரிதிமாற்கலைஞரின் நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு, 2.12.2006 அன்று 15 இலட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கியது அரசு.
- 17.8.2007 அன்று பரிதிமாற்கலைஞர் நினைவு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
--------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக